Published : 25 Oct 2022 05:58 AM
Last Updated : 25 Oct 2022 05:58 AM

'அமெரிக்க கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகிவிட்டது தீபாவளி' - அதிபர் ஜோ பைடன் பேச்சு

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் வெகுவான அளவில் இந்தியர் அமெரிக்கர்களும் விழாவில் பங்கேற்றனர்.

வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை இதற்கு முன்பு கொண்டாடப்பட்டிருந்தாலும் முன்னாப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை பெரிதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று இரவு நடக்கும் ஒரு மில்லியன் மக்கள் கலந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் ஜோ பைடன் கலந்துகொள்ள இருக்கிறார்.

முன்னதாக அமெரிக்க மாளிகையில் பேசிய ஜோ பைடன், "தீபாவளி கொண்டாட்டம் அமெரிக்க கலாச்சாரத்தின் ஒருபகுதியாக மாறிவிட்டது. இதற்காக ஆசிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். உங்களுக்கு விருந்தளிப்பதில் பெருமையடைகிறோம். இதுவே வெள்ளை மாளிகையில் நடைபெறும் முதல் தீபாவளி வரவேற்பு. வரலாற்றில் முன்னெப்போதையும் விட அதிகமான ஆசிய அமெரிக்கர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.

முதல் கறுப்பின அமெரிக்கர் மற்றும் தெற்காசிய அமெரிக்கரான துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் தலைமையில் அமெரிக்க வரலாற்றில் மிகவும் மாறுபட்ட நிர்வாக (பல நாடுகளைச் சேர்ந்த அமெரிக்கர்கள்) அமைப்பு முன்னிலையில் தீபாவளி கொண்டாடப்படுவது பெருமையாக உள்ளது. அமெரிக்கா முழுவதும் உள்ள தெற்காசிய சமூகம் வெளிப்படுத்திய நம்பிக்கை, தைரியத்துக்கு நன்றி. தெற்காசிய அமெரிக்கர்கள் ஒரு தேசமாக நாம் யார் என்ற ஆன்மாவை பிரதிபலிக்கிறார்கள். கரோனா தொற்றுநோயிலிருந்து வலுவாக வெளிப்படுவதற்கு உதவுவது, அனைவருக்கும் வேலை செய்யும் பொருளாதாரத்தை உருவாக்குவது, அல்லது எங்கள் சமூகங்கள் மற்றும் நம் நாட்டைப் பாதுகாப்பது மற்றும் சேவை செய்வது என ஆசியர்கள் பங்கு இங்கு அதிகம்" என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x