Published : 17 Oct 2022 01:23 PM
Last Updated : 17 Oct 2022 01:23 PM

வறுமை ஒழிப்பு தினம் | உலக அளவில் வறுமையில் வாடும் நாடுகளும் காரணங்களும்

பிரதிநிதித்துவப் படம்

1987, அக்டோபர் 17 அன்று பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள மனித உரிமைகள் மற்றும் விடுதலைக்கான சதுக்கத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் ஓரணியில் திரண்டனர். பசி, வறுமை, வன்முறை மற்றும் அச்சம் ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக திரண்ட மக்கள் திரள் அது. ஜோசப் ரெசின்ஸ்கியின் நினைவுத் தூணின் திறப்பை முன்னிட்டு கூடிய கூட்டமும் கூட.

மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையின் மூலமாக வறுமையை ஒழிப்பை முன்னெடுத்த தன்னார்வ தொண்டு நிறுவனமான இன்டர்நேஷனல் மூவ்மெண்ட் ஏடிடி போர்த் வேர்ல்ட் அமைப்பை நிறுவியவர் அவர். சரியாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 1992 வாக்கில் ஐ.நா சார்பில் அதே நாளை உலகில் வறுமையை ஒழிப்பதற்கான சிறப்பு தினமாக அறிவிக்கப்பட்டது.

வறுமை? ஒரு தனி நபர் அல்லது ஒரு குடும்பம் அடிப்படை அல்லது குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை பெறுவதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் இருக்கின்ற நிலையே வறுமை. இந்த நிலையில் இருக்கும் மக்களுக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் வீடு, சுகாதார வசதி, கல்வி உட்பட உயிர் வாழ அவசியமானதாக கருதப்படும் எந்தவித வசதியும் இல்லாமல் இருப்பது.

இதற்கு காரணமாக பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் முதன்மையானதாக இருப்பது வேலைவாய்ப்பு இல்லாமை. வாழ்வாதாராம் இல்லாத காரணத்தால் அன்றாட வாழ்வுக்கு வேண்டிய அடிப்படை தேவைகள் மறுக்கப்படுகிறது. அதன் காரணமாக அவர்களது குடும்பம் மற்றும் குழந்தைகளின் தேவைகள் மறுக்கப்படுகிறது. அது கல்வி, சுகாதாரம், குடிநீர், உணவு போன்றவற்றை அடக்கி உள்ளது.

போர், வன்முறை, பயங்கரவாதம், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதது, இயற்கை பேரிடர், வறட்சி, பெருந்தொற்று நோய்களும் வறுமைக்கான மற்ற காரணிகளாக உள்ளன. அதனால் உலக நாடுகள் வறுமைக்கு ஆளாகின்றன. அதனை ஒழிக்க உலக நாடுகள், தன்னார்வ அமைப்புகள் போன்றவை பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

பெரும்பாலும் உலக நாடுகளில் நிலவும் வறுமை சதவீதம் ஒரு சில வழிகள் மூலம் கணக்கிடப்படுகிறது. அதற்கென சில தியரிகளும் உள்ளன. அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 1.90 டாலர்களுக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் பிரிவினர் அதீத வறுமையில் இருப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். இது கடந்த 2011 வாக்கில் வாங்கும் திறன் சமநிலையை (PPP) அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது. இது தவிர இன்னும் சில வருமானத்தின் அடிப்படையிலும் வறுமை கணக்கிடப்படுகிறது.

தேசிய வறுமைக் கோட்டின் வரம்பிற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் மக்களின் நிலையை கொண்டும் உலக நாடுகளில் நிலவும் வறுமை சதவீதம் கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2011 தரவுகளின் அடிப்படையில் சுமார் 21.9 சதவீதம் பேர் வறுமையில் இருந்ததாக உலக வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

உலக வங்கியின் தரவுகளின் படி உலகில் அதிக வறுமை விகிதங்களைக் கொண்ட டாப் 10 நாடுகள்

தெற்கு சூடான் - 82.30%
ஈக்குவடோரியல் கினியா - 76.80%
மடகாஸ்கர் - 70.70%
கினியா-பெசாவ் - 69.30%
எரிட்ரியா - 69.00%
சாவோ டோம் மற்றும் பிரின்சிபி - 66.70%
புருண்டி - 64.90%
காங்கோ ஜனநாயக குடியரசு - 63.90%
மத்திய ஆப்பிரிக்க குடியரசு - 62.00%
குவேட்டமாலா - 59.30%

அக்டோபர் 17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x