Published : 07 Oct 2022 06:35 AM
Last Updated : 07 Oct 2022 06:35 AM

ஹரியாணா தனியார் மாநில நிறுவனம் தயாரிக்கும் 4 இருமல் மருந்துகளை நிறுத்த வேண்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குப்பகுதியில் காம்பியா நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டில் கடந்த 3 மாதங்களில் சிறுநீரக பாதிப்பு காரணமாக 66 குழந்தைகள் உயிரிழந்தன.

இதுதொடர்பாக ஆய்வு நடத் தியதில் குறிப்பிட்ட இந்திய நிறு வனத்தின் இருமல் மருந்துகள் காரணமாக குழந்தைகள் உயிரிழந் திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலக சுகாதார அமைப்பின் மருந்து உற்பத்தி பிரிவு காம்பியா நாட்டில் 4 இருமல் மருந்துகள் தரமற்றவை என்று கண்டுபிடித்துள்ளது. ப்ரோமேதசைன் ஓரல் சொல்யூசன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப், மேக்ரிக் என் கோல்டு சிரப் ஆகிய 4 இருமல் மருந்துகளில் அளவுக்கு அதிகமாக டைஎத்திலீன் கிளைக்கால், எத்திலீன் கிளைக்கால் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த இருமல் மருந்துகளை குடித்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.

எனவே குறிப்பிட்ட 4 இருமல் மருந்துகளை யாரும் பயன்படுத்த வேண்டாம். இந்தியாவின் ஹரி யாணா மாநிலத்தை சேர்ந்த மெய் டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் இந்த இருமல் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்துள்ளது. உலகின் எந்த பகுதியிலாவது குறிப்பிட்ட 4 இருமல் மருந்துகள் விநியோகத்தில் இருந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான விவேக் கோயல் கூறும்போது, “உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல் படுவோம்" என்று தெரிவித்தார்.

மத்திய அரசு சோதனை

மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு ஹரியாணாவின் சோனிபட், இமாச்சல பிரதேசத்தின் பட்டி ஆகிய நகரங்களில் உற்பத்தி ஆலைகள் உள்ளன. மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் இரு ஆலைகளிலும் நேற்று சோதனை நடத்தி இருமல் மருந்து மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கூறும்போது, ‘‘சம்பந்தப்பட்ட இரு ஆலைகளில் இருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்துகள் ஆய் வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் இப்போதைக்கு எதையும் உறுதியாக கூற முடிய வில்லை’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x