Published : 27 Sep 2022 04:58 AM
Last Updated : 27 Sep 2022 04:58 AM

ஷின்சோ அபே நினைவு சடங்கில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இன்று நடை பெறவுள்ள நினைவு சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

ஜப்பானின் நரா நகரில் கடந்த ஜூலை 8-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்று பேசினார். அப்போது, அவர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவருக்கு ஜூலை 12-ம் தேதி குடும்பத்தினர் சார்பில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்நிலையில், அரசு சார்பில் செப்டம்பர் 27-ம் தேதி முழு அரசு மரியாதையுடன் நினைவு சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று நடைபெற உள்ள ஷின்சோ அபே நினைவு சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு டோக்கியோவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிகழ்வில் சுமார் 100 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் வினய்க்வாத்ரா கூறும்போது, “ஜப்பான் முன்னாள் பிரதமரும் தனது நண்பருமான ஷின்சோ அபேவின் நினைவு சடங்கில் பங்கேற்க டோக்கியோ செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் அபே மனைவி ஆகியோரை தனித்தனியாக சந்தித்துப் பேச உள்ளார். பிரதமர் மோடியின் இந்தப் பயணம், மறைந்த அபேவுக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x