Published : 25 Sep 2022 06:16 AM
Last Updated : 25 Sep 2022 06:16 AM

தங்கள் நாட்டுடன் இணைக்க உக்ரைனின் லுஹான்ஸ்க் உட்பட 4 நகரங்களில் வாக்கெடுப்பு நடத்தும் ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக ரஷ்யா வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்து வருகின்றன. 6 மாதங்களைத் தாண்டி போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. குறிப்பாக நீபர் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஜபோரிஜியா நகர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று சேதமடைந்தது. அதில் வசித்து வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியில் ரஷ்ய அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் வாக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

தேர்தல் அதிகாரிகள் நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்துகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பாக போலீஸாரும் செல்கின்றனர். இந்த வாக்கெடுப்பு 5 நாட்களுக்கு (27-ம் தேதி வரை) நடைபெறவுள்ளது.

உக்ரைனின் பெரும்பகுதியை இணைத்துக்கொள்ள ரஷ்யா நடத்தும் இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் தெரிவித்துள்ளன. இந்த வாக்கெடுப்பை தோல்வியடையச் செய்ய வேண்டும் என ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ஆக்கிரமித்த ரஷ்யா, பின்னர் வாக்கெடுப்பு நடத்தி தன்னுடன் இணைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x