Published : 19 Sep 2022 04:09 PM
Last Updated : 19 Sep 2022 04:09 PM

எங்கள் வைரத்தை திருப்பிக் கொடுங்கள்: ராணி எலிசபெத் மறைவுக்குப் பின் தென் ஆப்பிரிக்காவில் வலுக்கும் குரல்

டர்பன்: இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இறுதிச் சடங்கை ஒட்டி லண்டன் நகரில் உலகத் தலைவர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். உலகின் கவனத்தை பிரம்மாண்ட இறுதி அஞ்சலி ஈர்த்துக் கொண்டிருக்கும் சூழலில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்து நோக்கி பல குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சர்வதேச கவனத்தையும் அவை ஈர்த்துள்ளன.

அரச குடும்பத்தின் பாரம்பரிய நகைகளில் ஒன்றான செங்கோலில் உள்ள வைரத்தை திருப்பி அளிக்குமாறு அந்தக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. கிரேட் ஸ்டார் ஆஃப் ஆப்பிரிக்கா என்றழைக்கப்படும் இந்த வைரத்திற்கு கல்லினன் என்ற பெயரும் உண்டு. 1905-ல் தென் ஆப்பிரிக்காவின் வைரச் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட பெரிய வைரத்தின் ஒரு பகுதிதான் இது. தென் ஆப்பிரிக்கா பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது பிரிட்டிஷ் ராஜ குடும்பத்திடம் அப்போதைய ஆட்சியாளர்களால் இந்த வைரம் ஒப்படைக்கப்பட்டது. இது தற்போது ராணியின் கிரீடத்தில் உள்ளது.

இந்நிலையில்தான் தென் ஆப்பிரிக்காவில் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் குழுக்களும் இணைந்து ராணியின் கிரீடத்தில் உள்ள வைரத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று கோருகின்றன. இது குறித்து தண்டக்ஸ்லோ சபேளோ என்ற நபர் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில், "எங்கள் நாட்டில் இருந்து சுரண்டி எடுத்துச் செல்லப்பட்ட வைரமும், இன்னும் சில தேசங்களில் இருந்து எடுக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களும் தான் ராணியின் கிரீடத்தை இன்னும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் மக்களின் ரத்தம்" அது என்றார்.

இணையத்தில் change.org என்ற ஆன்லைன் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "பிரிட்டன் இப்போதாவது பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடட்டும். திருடப்பட்ட தங்கம், வைரம் என அனைத்தையும் உரியவர்களிடம் ஒப்படைக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

ஏபிசி செய்தியின் படி செங்கோலில் உள்ள நீர்த்துளி வடிவிலான 530.2 கேரம் வைரத்தை தான் தென் ஆப்பிரிக்கா திருப்பியளிக்குமாறு கோருகிறது எனத் தெரிகிறது.. இது 1600களில் இந்த கிரீடத்தில் பொருத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்த வைரத்தின் பண மதிப்பு எவ்வளவு என்று தெரியாவிட்டாலும் இதன் வரலாறும், இதன் அரிய தன்மையும் இதன் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.

கோஹினூர் வைரம்: ஆந்திர மாநில சுரங்கத்தில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய வைரம் வெட்டியெடுக்கப்பட்டது. அதற்கு கோஹினூர் என்று பெயர் வைத்தனர். தற்போது உலகிலேயே மிகப்பெரிய வைரமாக (105 கேரட்) கோஹினூர் உள்ளது. அதன் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. கோஹினூர் வைரம் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. இது 14 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய தெலுங்கானாவின் வாரங்கலில் உள்ள ஒரு இந்து கோவிலில் தெய்வத்தின் ஒரு கண்ணாக பயன்படுத்தப்பட்டது. மாலிக் கஃபூர் (அலாவுதீன் கில்ஜியின் ஜெனரல்) அதை கொள்ளையடித்தார் என்றும், அதன்பின் முகலாயப் பேரரசின் பல ஆட்சியாளர்களுக்கு அனுப்பப்பட்ட பிறகு, சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் லாகூரில் அதை வைத்திருந்தார். மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகன் திலீப் சிங் ஆட்சியின் போது 1849ல் விக்டோரியா மகாராணிக்கு வைரம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

திப்பு சுல்தான் மோதிரம்: 1799ல் திப்பு சுல்தான் போர்க்களத்தில் மறைந்தபோது அவரது உடலில் இருந்து அவரது மோதிரம் பறிபோனது. அது பிரிட்டனில் நடந்த ஏலம் ஒன்றில் 1,45,000 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டதாக தகவல் உண்டு.

ரோசட்டா ஸ்டோன்: கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திரும்பிக் கொண்டுவர வேண்டும் என்ற குரல்களும் அவ்வப்போது எழுவது உண்டு. அதேபோல் தான் எகிப்திலும் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட ரோசட்டா ஸ்டோனை மீட்டெடுக்க வேண்டும் என்ற பல காலமாக பலரும் கோரி வருகின்றனர். இது எகிப்திலிருந்து பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும். அங்கிருந்து 1800களில் பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x