Published : 12 Sep 2022 06:23 AM
Last Updated : 12 Sep 2022 06:23 AM

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 21-வது நினைவு தினம் அனுசரிப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் 21-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் செயல்பட்டது. அங்கிருந்த 110 அடுக்குமாடிகள் கொண்ட இரட்டை கோபுரங்கள் மீது கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல்-காய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 3,000 பேர் உயிரிழந்தனர். 25,000 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 184 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர்தொடுத்தது. அந்த நாட்டில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவு அளித்த தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டது. கடந்த 2011 மே 2-ம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனும் கொல்லப்பட்டார்.

கடந்த 2001-ம் ஆண்டில் உலகவர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இரட்டை கோபுர தாக்குதல் என்று அழைக்கப்படுகிறது. இதன் 21-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பென்டகனில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்று தாக்குதலில் உயிரிழந்தவர் களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்க மரபின்படி நினைவு நிகழ்ச்சிகளில் தலைவர்கள் உரையாற்றுவது கிடையாது. எனினும் நினைவு புத்தகத்தில் அதிபர் ஜோ பைடன் தனது கருத்தை பதிவு செய்தார். அதில், “கடந்த 2001 இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அதே ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி தேசிய அவசர நிலை பிரகடனம் வெளியிடப்பட்டது. அந்த பிரகடனத்தை இப்போதும் உறுதியுடன் பின்பற்றி வருகிறோம். இதன்படி அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாத அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x