Published : 09 Sep 2022 06:42 PM
Last Updated : 09 Sep 2022 06:42 PM

துக்க நிகழ்வுக்கு தயாராகிறது பிரிட்டன்: எவை எல்லாம் செயல்படும்?

பக்கிங்காம் அரண்மனையில் சூழ்ந்துள்ள மக்கள்

லண்டன்: ராணி எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து அவருடைய இறுதி நிகழ்வுக்கான பணியில் பிரிட்டன் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமைதான் இங்கிலாந்தின் 56-வது பிரதமராக லிஸ் ட்ரஸ்ஸை முறைப்படி நியமித்தார் ராணி எலிசபெத். தன் வாழ்நாளில் அவர் நியமித்த 15-வது பிரதமர் லிஸ் ட்ரஸ். வழக்கமாக பிரதமர் நியமான நிகழ்வு பக்கிங்காம் அரண்மனையில்தான் நடைபெறும். ஆனால் ராணிக்கு நடப்பதில் சிரமம் இருந்ததால், இந்த முறை ஸ்காட்லாந்தில் நடந்தது. லிஸ் ட்ரஸுடன் கை, கால்கள் நடுங்கியபடி கைத்தடியுடன் மிகவும் சோர்வாகவே ராணி காட்சியளித்தார். இந்நிலையில், ராணி எலிசபெத் நேற்று இயற்கை எய்தியதாக அரசுக் குடும்பம் அறிவித்தது.

ராணியின் மறைவைத் தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் துக்க நிகழ்வில், எந்த அரசு நிறுவனங்கள் செயல்படும், எவை எல்லாம் செயல்படாது என்ற தகவல்களை வெளியிட பிரிட்டன் அரசும் தயாராகி வருகின்றது.

அந்த வகையில் துக்க தினங்களில் வங்கிகள் மற்றும் பள்ளிகள் செயல்படாது என்று அறிவிப்பு வெளிவர வாய்ப்புண்டு என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், தேசிய துக்க தினத்தை முன்னிட்டு நிகழ்வுகளை ரத்து செய்ய அரசு கட்டாயப்படுத்தாது எனவும், நிகழ்ச்சிகளை ரத்து செய்வது தனிப்பட்ட விருப்பம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

ராணியின் மறைவைத் தொடர்ந்து கால்பாந்தாட்ட லீக் தொடர்கள், கோல்ஃ விளையாட்டுகள் ரத்து செய்யபட்டுள்ளன. இங்கிலாந்து அரசை எதிர்த்து நடக்கவிருந்த வேலை நிறுத்தங்கள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளன.

துக்க தின நிகழ்வுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பிரிட்டன் அரசு விரைவில் வெளியிடும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x