Published : 04 Sep 2022 04:07 AM
Last Updated : 04 Sep 2022 04:07 AM

வெளிநாடு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்பினார் - வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஏறத்தாழ 7 வாரங்களுக்கு பின் நேற்று இலங்கை திரும்பிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு கொழும்பு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. படம்: பிடிஐ

கொழும்பு: வெளிநாடு தப்பிச்சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச 7 வாரங்களுக்குப் பிறகு நாடு திரும்பினார். கொழும்புவின் மையப் பகுதியில் உள்ள அரசு வீட்டில் அவர் பலத்த பாதுகாப்புடன் தங்கியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம்அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த இந்தப் போராட்டம் கடந்த ஜூலை மாதம் உச்சகட்டத்தை எட்டியது. பொதுமக்கள் அதிபர்மாளிகைக்குள் நுழைந்து சூறையாடினர்.

இதைத்தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது மனைவி மற்றும் 2 பாதுகாவலர்களுடன் விமானப் படை விமானம் ஒன்றில் கடந்த ஜூலை 19-ம் தேதி மாலத்தீவுக்கு தப்பிச்சென்றார்.

பின்னர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற அவர், அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். 2 வாரங்களுக்குப் பிறகு அவர் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியேற்றார்.

இந்நிலையில், கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்பவும், அவர் இங்கு பாதுகாப்புடன் வசிக்கவும் ஏற்பாடு செய்யுமாறு கோத்தபய தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன கட்சியினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று கோத்தபய நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை ரணில் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோத்தபய ராஜபக்ச, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவில் இலங்கை வந்து சேர்ந்தார். கொழும்புவில் உள்ள பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் அவரது விமானம் தரையிறங்கியது. கோத்தபய ராஜபக்சவை அவரது கட்சி எம்.பி.க்கள் வரவேற்றனர். பின்னர் அவர் கொழும்புவின் மையப் பகுதியில், முன்னாள் அதிபர் என்றமுறையில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு வீட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் சென்றார். அரசு வீட்டில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவர் தங்கியுள்ளார்.

வழக்கு நிலுவையில் இல்லை

கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்ற வழக்கோ அல்லது கைது உத்தரவோ நிலுவையில் இல்லை. கோத்தபயவின் அண்ணன் மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்தபோது கோத்தபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அப்போது ஊழல் செய்ததாக ஒரே வழக்கு கோத்தபய மீது இருந்தது. ஆனால் 2019-ல் அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x