ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை - மியான்மர் நீதிமன்றம் உத்தரவு

ஆங் சான் சூகி
ஆங் சான் சூகி
Updated on
1 min read

யாங்கூன்: தேர்தல் மோசடி வழக்கில் மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி. மியான்மரில் கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூகியின் தேசிய ஜனநாய லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கரோனா விதிகளை மீறியது, அலுவல்ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீட்டித்தது. இந்நிலையில் தேர்தல் முறைகேடு வழக்கில் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சூகிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அனைத்திலும் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in