சீன கம்யூனிஸ்ட் மாநாட்டையொட்டி பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா ஊரடங்கு தீவிரம்

சீன கம்யூனிஸ்ட் மாநாட்டையொட்டி பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா ஊரடங்கு தீவிரம்
Updated on
1 min read

பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டையொட்டி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங்நகரத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நேற்று மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டனர்.

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் மிக தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், 40 லட்சம் பேர் வசிக்கும் பெய்ஜிங்கை சுற்றியுள்ள ஹைபேயி மாகாணத்தில் இந்த வார இறுதி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான கரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அதேபோன்று, கரோனா பாதிப்பு தென்பட்டுள்ள துறைமுக நகரான தியான்ஜினில் வசிக்கும் மக்களுக்கும் கரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய பெரிய அளவிலான சோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நகரத்தில் மட்டும் 1.3 கோடிக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

அடுத்த மூன்று மாதங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிகாரிகள் கரோனா கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கையை இரண்டு மடங்கு வேகமாக்கி உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in