Published : 28 Aug 2022 05:33 AM
Last Updated : 28 Aug 2022 05:33 AM

இலங்கையில் பட்டினியாக உறங்கும் குழந்தைகள் - யுனிசெப் தெற்காசிய இயக்குநர் வேதனை

கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அந்நிய செலாவணியும் இலங்கையிடம் இல்லை.

இதனால், உணவுப் பொருட்கள், எரிபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர்.

அதன்பின், அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். எனினும் நிலைமையை சரி செய்ய முடியவில்லை.

பொதுமக்களை காப்பாற்ற கடனுதவி அளிக்க வேண்டும் என்று சர்வதேச செலாவணி நிதியத்திடம் (ஐஎம்எப்) இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கிடையில், இலங்கைக்கு உணவு தானியங்கள், எரிபொருள் மற்றும் நிதி என பல்வேறு வழிகளில் இந்தியா ஏராளமாக உதவி செய்து வருகிறது.

இந்நிலையில், ஐ.நா. அமைப்பின் கீழ் குழந்தைகள் நலனுக்காக செயல்படும் யுனிசெப், இலங்கையில் குழந்தைகளின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனிசெப் தெற்காசிய இயக்குநர் ஜார்ஜ் லார்யீ அட்ஜீ நேற்று கூறியதாவது:

இலங்கையில் சிறுவர், சிறுமிகள் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காமல் பட்டினியாக உறங்குகின்றனர். அடுத்த வேளை உணவு எப்போது கிடைக்கும் என்று தெரியாமல் உள்ளனர்.

இலங்கையின் இந்த நிலை தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை. உணவுப் பொருட்களின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவில் உள்ளது. பொதுமக்களால் வாங்க முடியவில்லை. இதனால் எதிர்காலத்தில் சிறுவர், சிறுமிகளின் நிலை மேலும் மோசமாகும் அபாயம் உள்ளது. இவ்வாறு ஜார்ஜ் லார்யீ அட்ஜீ கூறினார்.

ஊட்டச்சத்து குறைபாடு

இதற்கிடையில், இலங்கையில் மொத்தம் உள்ள குழந்தைகளில் பாதி பேருக்காவது ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்க 25 மில்லியன் டாலரை அவசரமாக ஒதுக்கும்படி யுனிசெப் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உணவுப் பற்றாக்குறையால் இலங்கையில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி மொத்தம் உள்ள 5 லட்சத்து 70,000 மழலையர் பள்ளி குழந்தைகளில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாடுடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x