சாவகாசமாக காப்பி குடித்த போலீஸார் - கருச்சிதைவான பெண் கைதிக்கு ரூ.3.83 கோடி இழப்பீடு தர உத்தரவு

சாவகாசமாக காப்பி குடித்த போலீஸார் - கருச்சிதைவான பெண் கைதிக்கு ரூ.3.83 கோடி இழப்பீடு தர உத்தரவு
Updated on
1 min read

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிகிச்சை தர தாமதம் ஏற்பட்டதால் கருச்சிதைவு ஏற்பட்ட பெண் கைதிக்கு ரூ.3.83 கோடி இழப்பீடு தருமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் 34 வயதான சான்ட்ரா குயினான்ஸ். இவர் செய்த குற்றத்துக்காக கடந்த 2016-ல் ஆரஞ்ச் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் கருவுற்று இருந்தார். சிறையில் இருந்தபோது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியில் ஸ்டார்பக்ஸ் ஓட்டலில் போலீஸார் காரை நிறுத்தி காபி சாப்பிட்டனர். அப்போது சான்ட்ராவுக்கு வலி அதிகமாக ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டதால் சான்ட்ராவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது.

சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த நிலையில் சான்ட்ரா, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். கருவுற்றிருந்த நிலையில் தனக்குத் தேவையான மருத்துவ வசதிகளை போலீஸார் செய்து தரவில்லையென்றும், அவசர நேரத்தில் அவர்கள் ஆம்புலன்ஸை வரவழைக்க ஏற்பாடு செய்யவில்லை என்றும் சான்ட்ரா குற்றம் சாட்டினார்.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சான்ட்ராவுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சான்ட்ராவுக்கு ரூ3.83 கோடி (4.8 லட்சம் அமெரிக்க டாலர்கள்) இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in