

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனின் ரகசிய இ-மெயில்களை விக்கிலீக்ஸ் கசியவிட்ட நிலையில், அதன் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சேவின் இணையதள தொடர்புகள் முடக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான், ஈராக் போர் தொடர்பான அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் அசாஞ்சே. இவர் சுவீடனில் தங்கி இருந்தபோது 2 பெண்களைப் பலாத்காரம் செய்ததாக குற்றச் சாட்டு எழுந்ததால், அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சமடைந்த அசாஞ்சே கடந்த 4 ஆண்டுகளாக, அங்கேயே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரியின் பிரச்சார அதிகாரியின் இ-மெயிலில் ஊடுருவி ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று அவரது இணையதள தொடர்புகள் திடீரென முடக்கப்பட்டன. மர்ம நபர்களின் சதி காரணமாக தொடர்பு முடக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் பேசப்பட்ட நிலையில், தற்போது ஈகுவடார் நாடு தான் இந்தச் செயலை செய்திருப்பதாக விக்கிலீக்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஈகுவடார் வெளியுறவு அமைச்சகம் வெளி யிட்ட அறிக்கையிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதேசமயம், தற்போதுள்ள சூழ்நிலையில் அசாஞ்சேவுக்குத் தொடர்ந்து அடைக்கலம் அளிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
இது குறித்து விக்கிலீக்ஸ் வெளி யிட்ட ‘ட்விட்டர்’ தகவலில், ‘‘ஹிலாரி கிளிண்டனின் பிரச்சார அதிகாரிகள் தொடர்பான இ-மெயில்களை கசியவிட்டதும், உடனடியாக அசாஞ்சேவின் இணைய இணைப் புகள் முடக்கப்பட்டன’ என தெரிவித்துள்ளது.