Published : 21 Oct 2016 06:58 PM
Last Updated : 21 Oct 2016 06:58 PM
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் குருத்வாராக்களின் பாதுகாப்புக்காக, ரூ.40 கோடி செலவில் நவீன திட்டத்தை செயல்படுத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத், லர்கானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்து கோயில்கள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகின. பாகிஸ்தானில் மத சிறுபான்மையினராக கருதப்படும் இந்து, கிறிஸ்தவ மற்றும் சீக்கியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோவின் அறிவுறுத்தலின் பேரில், வழிபாட்டுத் தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, சிந்து மாகாணத்தில் உள்ள 703 இந்து கோயில்கள், 523 கிறிஸ்தவ தேவாலயங்கள், 6 குருத்வாராக்கள் மற்றும் 21 அகமதியர்களின் வழிபாட்டுத் தலங்கள் என மொத்தம், 1,253 இடங்களை சிந்து மாகாண போலீஸார் பட்டியலிட்டுள்ளனர்.
இவ்விடங்களில் மொத்தம் 2,310 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதோடு, நவீன கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட உபகரணங்கள் பொருத்தி, பாதுகாப்பை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான நவீன பாதுகாப்பு திட்டத்துக்காக, ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டான்’ பத்திரிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT