Published : 22 Aug 2022 12:57 PM
Last Updated : 22 Aug 2022 12:57 PM

இம்ரான் கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் , பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கானின் உதவியாளர் ஷாபாஸ் கில் கடந்த வாரம் தேச விரோத வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஷாபாஸ் கில்லுக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கான் தலைமையில் சனிக்கிழமை பேரணி நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த பொதுக் கூட்டத்தில், அந்நாட்டின் பெண் நீதிபதி, போலீஸ் அதிகாரிகள், தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்தார்.

இதுதான் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இம்ரான் கான் வரம்பு மீறி அரசு அமைப்புகளுக்கே மிரட்டல் விடுக்கிறார் என பாகிஸ்தான் அரசு அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யதுள்ளது.

இந்தச் சூழலில், இம்ரான் கான் பேச்சை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு அந்நாட்டு ஊடக அமைப்பு தடை விதித்துள்ளது.

கூட்டணி கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது முதல் தனது பதவி விலகல் பின்னணியில் வெளிநாட்டு தலையிடல் இருந்து வருவதாக அவர் குற்றம் சுமத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x