சீனா | மனிதர்களுக்கு மட்டுமல்ல... மீன், நண்டுகளுக்கும் கரோனா பரிசோதனை: காரணம் என்ன?

சீனா | மனிதர்களுக்கு மட்டுமல்ல... மீன், நண்டுகளுக்கும் கரோனா பரிசோதனை: காரணம் என்ன?
Updated on
1 min read

பீஜிங்: சீன தேசத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது மீன், நண்டு போன்ற விலங்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனை அந்த நாட்டு ஊடகம் ஒன்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கரோனா தொற்று பரவலின் பிறப்பிடமாக அறியப்படுகிறது சீன தேசம். அங்குள்ள வூஹான் மாகாணத்தில்தான் உலகிலேயே முதல் முறையாக இந்த தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்து இப்போது உலகின் ஏழு கண்டங்களுக்கும் கரோனா பரவியது.

இந்நிலையில், சீனாவின் சியாமென் (Xiamen) நகர் உட்பட பெரும்பாலான பகுதிகளை சேர்ந்த சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சோதனை வெறும் மனிதர்களோடு நின்று விடாமல் கடல்வாழ் உயிரினங்களிடமும் அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குச் சான்றாக சீன ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள வீடியோ கவனம் பெற்றுள்ளது. அதில், சுகாதாரத் துறை ஊழியர்கள் மீன் மற்றும் நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடையும் (PPE கிட்) அணிந்துள்ளனர். மீனின் வாய் பகுதி மற்றும் நண்டின் ஓட்டிலும் PCR பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இது நெட்டிசன்கள் கவனத்தை பெற்றுள்ளது. இது வேடிக்கையாக இருந்தாலும் தொற்று பரவலை தடுக்க அரசு முன்னெடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையாக பார்ப்பதாக பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது ஒரு ஜோக் என நினைத்ததாக பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in