Published : 19 Aug 2022 04:49 AM
Last Updated : 19 Aug 2022 04:49 AM

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எப்-16 போர் விமானங்களுடன் தைவான் தீவிர போர் பயிற்சி

தைபே: தைவானை தனது பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகளுக்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சமீபத்தில் தைவான் பயணம் மேற்கொண்டார்.

இதனால் கோபம் அடைந்த சீனா, தைவான் எல்லை அருகே போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. சீனாவின் போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி பறந்தன. இதனால் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தும் என்ற பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் சீனாவின் போர் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தைவான் விமானப்படை போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹாலேன் விமானப்படைத் தளத்தில் எப்-16 ரக போர் விமானங்களில், ஏவுகணைகளை பொருத்துவது குறித்து விமானப்படையினர் நேற்று முன்தினம் செய்முறை விளக்கம் அளித்தனர். அதன்பின் நள்ளிரவில் எப்-16 போர் விமானங்கள் வானில் பறந்து, சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போர் பயிற்சியில் ஈடுபட்டன.

இது குறித்து தைவானின் முன்னாள் கடற்படை வைஸ் அட்மிரல் சேகர் சின்ஹா கூறுகையில், “தைவானிடம் அதிகளவில் போர் விமானங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நவீன எப்-16 ரக போர் விமானங்கள் உள்ளன. இன்னும் அதிகளவில் எப்-16 ரக போர் விமானங்களை தைவானுக்கு விற்க அதிபர் ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x