பாகிஸ்தான் திரும்புகிறார் முன்னாள் பிரதமர் நவாஸ்

பாகிஸ்தான் திரும்புகிறார் முன்னாள் பிரதமர் நவாஸ்

Published on

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மீது பனாமா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப்புக்கு ஒரு வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனிடையே மருத்துவ சிகிச்சைக்காக நீதிமன்ற அனுமதி பெற்று 2019-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர் அதன் பின்னர் நாடு திரும்பவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப் பேற்றார். நவாஸ் ஷெரீப்பின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காலாவதியான பின்பு, அதனை புதுப்பிக்க அப்போது ஆட்சியில் இருந்த இம்ரான் கான் அரசு மறுத்தது.

நவாஸ் ஷெரீப்தற்போது நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டை ஷெபாஸ் ஷெரீப் அரசு வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு அடுத்த மாதம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் கூறும்போது, "எனது தந்தை தாய்நாடு திரும்ப விரும்புகிறார். ஆனால் சில சிக்கல்கள் உள்ளன" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in