Published : 11 Aug 2022 01:28 PM
Last Updated : 11 Aug 2022 01:28 PM

முடிவுக்கு வந்தது போர் பதற்றம் | தைவான் எல்லையில் ராணுவ பயிற்சி நிறைவு பெற்றதாக சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: தைவான் எல்லையில் ராணுவப் பயிற்சிகள் முடிந்துவிட்டதாகவும், வழக்கமான ரோந்துப் பணிகளைத் திட்டமிட்டு வருவதாகவும் சீனா கூறியுள்ளது.

முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இந்தப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை முடியும் என சீனா அறிவித்திருந்தது. சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் எனவும் தைவான் ராணுவமும் பதிலடி அளித்திருந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தாண்டியும், தைவான் எல்லையோரத்தில் சீனா தனது போர் பயிற்சிகளை தொடர்ந்தது. இதனை தைவான் கடுமையாக விமர்சித்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே வரும் நாட்களில் மோதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ராணுவ பயிற்சிகள் முடிந்ததாக சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ராணுவ பயிற்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தைவான் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணிகளை நடத்த திட்டமிட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த அறிவிப்பு மூலம் கடந்த ஒருவாரமாக நீடித்த போர் பதற்றம் முடிவுக்கு வந்திருக்கிறது.

பின்னணி: சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.

அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் அமெரிக்க எம்.பி. நான்சி பெலோசி வருகைக்குப் பின்னர் சீன தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. அது நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளுக்கு நிம்மதி அளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x