Published : 11 Aug 2022 05:59 AM
Last Updated : 11 Aug 2022 05:59 AM

தாய்லாந்து செல்கிறார் கோத்தபய ராஜபக்‌ச

கோத்தபய ராஜபக்‌ச

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்‌ச குறுகிய கால அடிப்படையில் தாய்லாந்தில் தஞ்சம் அடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அவர் தாய்லாந்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்த நிலையில், எரிபொருள், மருந்துகள், உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அந்நாடு உள்ளது. மக்கள் எரிபொருளை நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், மக்களின் அன்றாடம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

மக்கள் போராட்டம்

நிலவரம் தீவிரமடைந்த நிலையில் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர். ஜுலை மாதம் மக்கள் போராட்டம் உச்சமடைந்தது. அதிபர் மாளிகையைச் சுற்றி மக்கள் திரள் கூடியது. கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினர். உயிருக்கு அச்சுறுத்தலான சூழல் உருவானதை அடுத்து, கோத்தபய ராஜபக்‌ச மாலவுத்தீவுக்கு தப்பிச் சென்றார். அதற்குள் அதிபர் மாளிகையைக் கைப்பற்றி போராட்டக்காரர்கள் தொடர்ந்து அங்கேயே தங்கினர். மேலும் கோத்தபய அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றார் கோத்தபய. அங்கிருந்தபடி, ஜுலை 14-ம் தேதி அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகியதை அடுத்து ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.

தற்போது கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்ப முடியாத நிலையில் உள்ளார். இதன் காரணமாக குறுகிய கால அடிப்படையில் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துவருகிறார்.

தாய்லாந்து விளக்கம்

தற்போது தாய்லாந்தில் குறுகியகால அடிப்படையில் தஞ்சம் அடைய இருப்பதாகவும் இன்று அவர் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசா நேற்று கூறும்போது, "இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தற்காலிகமாக தாய்லாந்தில் தங்க அனுமதி கோரியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அவர் தங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். நிரந்தரமாக தங்க அனுமதி வழங்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x