ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பெண் அதிகாரி பொறுப்பேற்பு: இதுவே முதல்முறை

ருச்சிரா கம்போஜ்
ருச்சிரா கம்போஜ்
Updated on
1 min read

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பெண் அதிகாரி ஒருவர் முதன்முறையாக பொறுப்பேற்றுள்ளார். 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான ருச்சிரா கம்போஜ் தான் இந்தப் பதவிக்கு தேர்வாகியுள்ளார்.

இவர் கடைசியாக பூடானுக்கான இந்திய தூதராக இருந்தார். இந்நிலையில் ஜூன் மாதம் அவர் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக அப்பதவியில் இருந்த டி.எஸ்.திருமூர்த்தியின் பதவிக்காலம் முடிந்த நிலையில் ருச்சிரா கம்போஜ் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து ருச்சிரா கம்போஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று நான் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்ரேஸை சந்தித்து நான் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தேன். இந்தியாவில் இருந்து இந்தப் பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் என்ற கவுரவத்தைப் பெற்றுள்ளேன். பெண்களே.. நம்மால் நினைத்தால் முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in