Published : 29 Sep 2016 02:38 PM
Last Updated : 29 Sep 2016 02:38 PM
தங்களது காட்டுமிராண்டித்தனமான செயல்களை நியாயப்படுத்த 'இஸ்லாம்' என்ற பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று கூறும் ஒபாமா, தான் ஒருபோதும் 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்று கூறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒபாமா வெர்ஜீனியாவில் பேசியதாவது:
"இது ஒரு ‘தயாரிக்கப்பட்ட ஒரு சொல் பயன்பாடு ஆகும். ஆனால் அல் காய்தா, ஐஎஸ் போன்ற பெயர்களுடன் பயங்கரவாத அமைப்புகள் இயங்குகின்றன என்பதில் ஐயமில்லை. இவர்கள் திரிபுவாதிகள், வக்கிரமாக தங்கள் காட்டுமிராண்டித்தனம் மற்றும் கொலைகளுக்கு இஸ்லாம் என்ற பெயரை திரித்து பயன்படுத்துகின்றனர். இஸ்லாத்தின் பெயரால் தங்கள் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.
இவர்கள்தான் அப்பாவி மக்களைக் கொல்கின்றனர், முஸ்லிம்களைக் கொல்கின்றனர், பாலியல் அடிமைகளை வைத்துக் கொண்டுள்ளனர். இவர்கள் செய்யும் எந்த ஒரு அபவாதத்தையும் மதரீதியான காரணங்களினால் நியாயப்படுத்த முடியாது.
இந்நாட்டில் முஸ்லிம்கள் அமைதியை நாடுபவர்கள், பொறுப்பு மிக்கவர்கள், ராணுவத்தில் உள்ளனர், போலீஸ் அதிகாரிகளாக உள்ளனர், ஆசிரியர்களாக உள்ளனர். அண்டை வீட்டாராக, நண்பர்களாக இருக்கின்றனர்.
இது குறித்து நான் அமெரிக்காவில் உள்ள முஸ்லிம் குடும்பத்தினர் மற்றும் அயல்நாடுகளில் உள்ள முஸ்லிம்களிடம் நான் கேட்டறிந்த போது இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று கூறுவது இஸ்லாத்தையே பயங்கரவாதம் என்பது போன்ற உள்ளர்த்தங்களை கொடுக்கிறது என்று கூறினர். இதனால் தங்கள் உணர்வுகளே தாக்கப்படுவதாக அவர்கள் வருந்துகின்றனர்.
சில வேளைகளில், இதனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம்களின் ஒத்துழைப்பைக் கோர முடிவதில்லை.
எனவே, இஸ்லாமிய பயங்கரவாதம் என்று கூறும்போது, அவர்கள் ஏதோ இஸ்லாத்துக்காக பேசுபவர்கள் போல் ஆகி விடுகிறது. நிச்சயம் இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அமெரிக்க அதிபராக விருப்பம் கொண்டு போட்டியிடுபவர்களும் இத்தகைய பிரயோகத்தை தவிர்ப்பது நல்லது.
இவ்வாறு கூறினார் ஒபாமா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT