Published : 18 Jul 2022 11:25 AM
Last Updated : 18 Jul 2022 11:25 AM

இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்: இடைக்கால அதிபர் ரணில் நடவடிக்கை

ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்திருக்கிறார்.

இடைக்கால அதிபராக பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்று அமைதியின்மையை கட்டுக்குள் கொண்டுவர ஞாயிற்றுக்கிழமை அவசர நிலை பிரகடனத்தை அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், "பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல்,சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றின் நலன்களுக்காக நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரநிலையை அடுத்து தலைநகர் கொழும்புவில் அமைதியான சூழல் நிலவுவதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் அவசர நிலை பிரகடனத்தால் எந்தப் பயணும் இல்லை என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், மக்கள் போராட்டம் வலுத்தது. அவர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச, மாலத்தீவு தப்பிச்சென்று, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் யபா அபேவர்த்தனாவுக்கு அனுப்பினார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

நாட்டை விட்டு வெளியேறும் முன்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால அதிபராக கோத்தபய நியமித்திருந்தார். அதன்படி, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அதிபரை தேர்வு செய்யும் பணி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். புதிய அதிபரை தேர்வு செய்ய, நாடாளுமன்றத்தில் வரும் 20-ம்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x