போலீஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட டெட்சுயா யமாகாமி
போலீஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட டெட்சுயா யமாகாமி

ஜப்பான் முன்னாள் பிரதமர் படுகொலை | “ஷின்சோ மீது அதிருப்தியில் இருந்தேன்...” - கைதானவர் வாக்குமூலம்

Published on

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்ட நபர், போலீஸில் வாக்குமூலம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அவர், தான் ஷின்சோ அபே மீது கடும் அதிருப்தியில் இருததாகவும், அவரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் கடற்படை வீரர்: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஷின்சோவை சுட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு 41 வயதாகிறது. அவர் பெயர் டெட்சுயா யமாகாமி. ஜப்பான் கடற்படையின் தற்காப்புப் பிரிவு முன்னாள் உறுப்பினராவார். ஷின்சோவை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனேயே அங்கு வந்ததாக அவர், போலீஸ் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். சம்பவம் நடந்த சில விநாடிகளிலேயே போலீஸார் அவரைப் பிடித்தனர்.

சம்பவ இடத்தில் சிக்கியபோது அவர் சாம்பல் நிற டிஷர்ட் மற்றும் பழுப்பு நிற பேன்ட் அணிந்திருந்தார். தோளில் ஒரு பையும் மாட்டியிருந்தார். அதில்தான் அவர் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. அவரை போலீஸார் மடக்கிப் பிடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

டெட்சுயா யமாகாமி தற்போது நரா நிஷி காவல் நிலையத்தில் போலீஸார் விசாரணையில் உள்ளார். அதிருப்தியால் கொலை செய்தேன் என்று அவர் கூறியதால் ஏன், எதற்காக போன்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாக்குதலுக்காக டெட்சுயா யமாகாமி பயன்படுத்திய துப்பாக்கி அவராலேயே தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in