Published : 17 Jun 2022 06:21 PM
Last Updated : 17 Jun 2022 06:21 PM

ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாம்: பிரிட்டன்

லண்டன்: ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு விசாரணைக்காக நாடு கடத்தப்படலாம் என பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க ராணுவம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதல் தொடர்பான ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியிட்டார் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இதனால் விக்கிலீக்ஸ் மீது குற்ற விசாரணையை அமெரிக்கா தொடங்கியது.

இதனிடையே, இங்கிலாந்தில் இருந்த ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, அவருக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது ஸ்வீடன். இது அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முயற்சி என ஜூலியன் அசாஞ்சே குற்றம்சாட்டினர்.

இந்த வழக்கில் தோல்வியைச் சந்தித்த ஜூலியன் அசாஞ்சே ஜாமீன் விதிமுறைகளை மீறி, லண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சம் அடைந்தார். 2019-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈக்குவடார் அரசு வாபஸ் பெற்றது. அதன்பின் ஜூலியன் அசாஞ்சேவை இங்கிலாந்து போலீசார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர்.

உளவு பார்த்ததாக ஜூலியன் அசாஞ்சே மீது 17 குற்றச்சாட்டுகள் உள்ளதால் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும்படி இங்கிலாந்து அதிகாரிகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்க சிறையின் கடுமையான சூழலைச் சந்திப்பது, தன்னை தற்கொலைக்கு தூண்டும் என ஜூலியன் அசாஞ்சே தரப்பில் கூறப்பட்டதால், முதலில் அமெரிக்காவின் கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த நிலையில், ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு விசாரணைக்காக நாடு கடத்தப்பட இருக்கிறார் என்று பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டனின் இந்த முடிவு குறித்து அசாஞ்சே மனைவி பேசும்போது, “எனது கணவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. பத்திரிகையாளராக அவரது பணியைதான் செய்தார். தனது பணியை செய்தற்காக அவர் தண்டனை அனுபவித்து வருகிறார்” என்றார்.

பிரிட்டனின் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அசாஞ்சேக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x