Published : 09 Jun 2022 05:44 PM
Last Updated : 09 Jun 2022 05:44 PM

உலக அளவில் கரோனா குறைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம்

ஜெனீவா: உலக அளவில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் தரப்பில் வெளியிட்ட தகவலில், “மே மாதம் இறுதி வாரத்தில் உலக அளவில் சுமார் 30 லட்சம் பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் கரோனா பாதிப்பு 12% குறைந்துள்ளது. உலக அளவில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பும் குறைந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,14,220 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐரோப்பாவில் 10,018 பேருக்கும், ஆசியாவில் 1,57,665 பேரும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனாவின் தீவிரம் குறைந்து வருகிறது... - உலகளவில் கரோனாவின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் கரோனாவுக்கு 555 பேர் பலியாகினர்.

ஐரோப்பா, சீனா, அமெரிக்கா நாடுகளில் கரோனா இறங்கு முகத்தில்தான் உள்ளது. கரோனா தொற்று உள்ள நாடுகளில் மிதமான பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன, தீவிர சிகிச்கை பிரிவில் சேர்க்கப்படும் அளவு இல்லை எனவும், கரோனாவினால் தற்போது உலக அளவில் மிதமான பாதிப்பே (சளி, காய்ச்சல், இருமல்...) ஏற்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உலகம் முழுவதும் தொற்றின் பாதிப்பு முழுமையாக நீங்கும் வரை மக்கள் கரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளான முகக்கவசம், கைகளைக் கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிப்பது அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் 2019-ஆம் ஆண்டு வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றம் அடைந்து கடந்த இரண்டரை வருடங்களாக உலக நாடுகளில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x