Published : 01 Jun 2022 04:43 PM
Last Updated : 01 Jun 2022 04:43 PM

இலங்கையில் வாட் வரி, வருமான வரி உயர்வு: பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் வாட் வரி, வருமான வரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் வருவாயை அதிகரிக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு என பெரும் பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அந்நியச் செலவாணி கையிருப்பு இல்லாததால் அன்றாடம் பொருட்களை வாங்க கடன் வாங்கும் நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாத திவால் ஆகும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்றவற்றிடம் கடன் வாங்க இலங்கை முயன்ற வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால் திடமான பொருளாதார திட்டம் இல்லாத இலங்கைக்கு கடன் கொடுக்க வாய்ப்பில்லை என உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் உலக நாடுகள் மறுத்து வருகின்றன.

இந்தநிலையில் புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை குறைந்த வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தியது. இந்தச் சீர்திருத்தங்களில் மதிப்பு கூட்டு வரி (VAT), தனிப்பட்ட வருமான வரி மற்றும் பெருநிறுவன வருமான வரி ஆகியவை குறைக்கப்பட்டன. மதிப்பு கூட்டு வரி மற்றும் தனிப்பட்ட வருமான வரி ஆகியவற்றின் வரி விகிதங்களும் குறைக்கப்பட்டன. விவசாயம், தகவல் தொழில்நுட்பத்திற்கான வரி விலக்குகள், குறிப்பிட்ட சேவைகளுக்கு வரி விலக்குகள் வழங்கப்பட்டன.

சில பொருட்களுக்கு வரி விடுமுறைகள், வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. 2020-21-ம் ஆண்டில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், வரி சீர்திருத்தங்கள் அரசாங்க வருவாயில் குறிப்பிடத்தக்க இழப்புக்கு வழி வகுத்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கான வருவாய் 2019 இல் 12.7 சதவீதத்திலிருந்து 2020 இல் 9.1 சதவீதமாகக் குறைந்துள்ளது, மேலும் 2021 இல் 8.7 சதவீதமாக மோசமடைந்துள்ளது. இது வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வருவாய் விகிதமான 25 சதவீதத்தை விட கணிசமான குறைவாகும்.

இந்த நிதி ஏற்றத்தாழ்வு பொருளாதாரத்தின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்நியச் செலாவணி தட்டுப்பாடு, நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகள், கடன் மதிப்பீடு குறைவதால் வணிகம் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சி மோசமாகப் பாதிக்கப்படும்.

எனவே வருவாயை மேம்படுத்துதல், நாட்டின் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி நோக்கங்களை நிறைவேற்றுவதில் வரி உயர்வை செயல்படுத்துவது அவசியம். இதனால் இலங்கையில் வரியை மீண்டும் உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு அறிவித்தபடி மதிப்பு கூட்டு வரி (வாட்) 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், தொலைத் தொடர்பு வரி 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரு நிறுவன வரி 24 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட வருமான வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டு வுரும் விலக்குகளும் குறைக்கப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு 30 லட்சத்தில் இருந்து 18 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு எந்த வித வருமான வரி சலுகையும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x