முஸ்லிம்களுக்கு தடை வெறும் யோசனை மட்டுமே: ட்ரம்ப் பல்டி

முஸ்லிம்களுக்கு தடை வெறும் யோசனை மட்டுமே: ட்ரம்ப் பல்டி
Updated on
1 min read

அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிப்பது என்பது வெறும் யோசனை மட்டுமே என அமெரிக்காவின் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் பிரச்சாரம் மேற்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என கூறினார். இது சர்வதேச அளவில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாக்ஸ் ரேடியோவுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், "முஸ்லிகள் அடிப்படைவாத பயங்கரவாதம் என்பது அதிமுக்கிய பிரச்சினை. அதை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிப்பது என்பது வெறும் யோசனை மட்டுமே. அதுவும் தற்காலிகமானதே. இந்த நடவடிக்கையை இதுவரை யாரும் செயற்படுத்தவில்லை.

முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் பரவி இருக்கின்றனர். முஸ்லிம்கள் பாரிஸுக்கு செல்ல முடிகிறது, சான் பெர்னார்டியோ செல்ல முடிகிறது. முஸ்லிம் அடிப்படைவாதம் பரவிக்கிடப்பதை லண்டன் நகரின் புதிய மேயர் சாதிக் கான் போன்றோர் வேண்டுமானால் மறுக்கலாம். ஆனால், நான் அதை எப்போதுமே மறுக்கமாட்டேன். சாதிக் கான் நமது அதிபர் ஒபாமா போல் முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாதத்தை மறுக்கிறார்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in