Published : 22 May 2022 07:09 AM
Last Updated : 22 May 2022 07:09 AM

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றவே ரணில் பிரதமராக பதவியேற்பு: இலங்கை எம்பி குற்றச்சாட்டு

பெரம்பலூர்: இலங்கை நுவரெலியா தொகுதி எம்பி ராதாகிருஷ்ணன் பெரம்பலூர் மாவட்டம் துறை மங்கலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கையில் தற்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, சீரற்ற அரசியல் நிலை காணப்படுகிறது. இந்நிலையில், ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்று உள்ளார். ரணில் விக்ரமசிங்கவை ராஜபக்ச விலைக்கு வாங்கியுள்ளார். இப்போது, ரணில் விக்ரமசிங்க, மக்களை விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறார்.

கச்சத்தீவு குறித்து இந்திய அரசியல்வாதிகள் பேசினாலும்கூட இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறுவார்களா? என்ற சந்தேகம் உள்ளது. கச்சத்தீவு பிரச்சினையில் இருசாராரும் சேர்ந்து நடவடிக்கை எடுப்பதே சிறந்தது.

எது எப்படி இருந்தாலும், 2 நாடுகளும் தற்போது உடன்பட்டு செய்ய வேண்டிய வேலைகள் பல இருக்கின்றன. ஏனென்றால், இலங்கைக்கு அதிகமான உதவிகளை செய்த நாடு இந்தியா. இந்தியாவின் உதவிகள் இலங்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது. எனவே, இந்தியாவை ஒருபோதும் மறக்க முடியாது. இதற்காக, இந்திய பிரதமர் மோடியையும், அவரது அரசையும் பாராட்டுகிறோம்.

அதேநேரத்தில், தமிழக அரசும், முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக மக்களும் இலங்கைக்கு உதவி செய்து வருகின்றனர். அவர்களையும் பாராட்டுகிறோம். பேரறிவாளன் விடுதலையை வரவேற்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x