Published : 21 May 2022 10:56 AM
Last Updated : 21 May 2022 10:56 AM

ஐரோப்பாவில் மங்கிபாக்ஸ் பரவல் எதிரொலி: விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகரித்தது இந்தியா

ஐரோப்பிய நாடுகளில் மங்கிபாக்ஸ் (monkeypox) நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 100 பேருக்கும் மேல் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு அனைத்து சர்வதேச விமானநிலையங்களிலும் இதுதொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மத்தியில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் அவர்களிடம் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பிவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு முழுக்க முழுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதுவரை இந்தியாவில் இத்தொற்று கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தி நெதர்லாந்த், போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் மங்கிபாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் நேற்று (வெள்ளிக்கிழமை) அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது. ஹூ அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக், இது கோடை காலம் என்பதால் உலகெங்கும் ஆங்காங்கே பெருங்கூட்டங்கள், விழாக்கள், கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமிருக்காது. அதனால் மங்கிபாக்ஸ் பரவ வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார்.

மங்கிபாக்ஸ் அறிகுறிகள் என்ன? 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடையே பரவிய இந்த நோய் மனிதர்களிடையே 1970 ஆம் ஆண்டு காங்கோவில் பரவியது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் ‘மங்கி பாக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. மங்கி பாக்ஸ் வைரஸ் பாக்ஸ்வைரிடே (Poxviridae) குடும்பத்தில் உள்ள ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் (Orthopoxvirus) இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பெரியம்மை, பசு, குதிரை மற்றும் ஒட்டகம் போன்றவற்றில் இருந்து பரவும் பாக்ஸ் நோயைச் சார்ந்தது.

இந்த நோய் வந்தால் காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, தசை வலி, மிகுந்த உடல் சோர்வு, கணுக்கால் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. மேலும், காய்ச்சல் வந்த 3 நாட்களுக்குள் சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. குறைந்தது 6 நாட்கள், அதிகபட்சமாக 21 நாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது.இந்நோய் ஏற்படும் 10-ல் ஒருவருக்கு இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் மத்தியிலேயே உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆரம்ப அறிகுறி ஃப்ளூ காய்ச்சல் போன்றே இருக்கும். நெறி கட்டுதலும், முகத்திலும் உடலிலும் ஏற்படும் தடிப்புகளும் இந்த நோயின் முக்கிய அறிகுறி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x