

அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் சியாட்டில் நகரில் உள்ள பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த ஒரு மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து சியாட்டில் நகர காவல் துறை உயர் அதிகாரி பால் மெக்டொனா கூறியதாவது:
தனியாருக்கு சொந்தமான சியாட்டில் பசிபிக் பல்கலைக்கழகத்தில் சுமார் 4 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இதனுள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர், தன்னிடமிருந்த துப்பாக்கியால் மாணவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். இதில் 4 பேர் மீது குண்டு பாய்ந்தது. இதில் 20 வயதுடை ஒரு மாணவன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் போது உயிரிழந்தார்.
மற்றொரு மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, மாணவர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர், மர்ம நபர் மீது மிளகுப்பொடியை தூவி மடக்கிப்பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த போலீஸார், மர்ம நபரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவரது வயது 26 எனவும் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது என்றார்.
2 வாரங்களுக்கு முன்பு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒரு இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.