Published : 14 May 2022 10:50 PM
Last Updated : 14 May 2022 10:50 PM

'கரோனா பெருந்தொற்று வடகொரியாவை கொந்தளிப்பில் தள்ளியிருக்கிறது' - அதிபர் கிம் ஜாங் உன்

பியொங்யாங்: வட கொரியாவில் காய்ச்சல காரணமாக 21 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கோவிட்- 19 பரவல் வட கொரியாவை பெரும் கொந்தளிப்புக்குள் தள்ளியுள்ளதாகவும், நாடு தொற்றுநோய் பரவலுக்கு எதிராக பெரிய போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் கரோனா பெருந்தொற்று உலுக்கி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குக்கூட கரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனப் பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் இந்த வாரத்தில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசரநிலை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வடகொரியாவில் 1,74,440 பேருக்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 21 பேர் பலியானதாக வடகொரியா அரசு ஊடகம் நேற்று தெரிவித்திருந்தது. ஆனால் இறந்தவர்கள் கரோனா காரணமாக உயிரிழந்தார்களா என்ற தகவலை வடகொரியா தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், கரோனா பரவல் வடகொரியாவை பெரும் கொந்தளிப்புக்குள் தள்ளியிருப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் அவரசக்கூட்டம் ஒன்றில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் "தொற்றுநோய் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து நம் நாடு பெரும் கொந்தளிப்புக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும் தொற்று நோய் தடுப்பு கொள்கைகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி கட்சியினர், நாட்டு மக்கள் அனைவரும் தொற்று நோய்க்கு எதிராக ஒரே எண்ணத்துடன் ஒன்றிணைந்து கட்டுப்பாடுடன் போராடினால் இந்த நெருக்கடியை நாம் எளிதாக சமாளிக்க முடியும்.

கட்சி அமைப்புகளின் திறமையின்மை மற்றும் பொறுப்பில்லாத தன்மையினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தொற்றுப் பரவுதை தடுக்க முடியாது. குறுகிய காலத்தில் இந்த தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் நாடு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.

சுகாதார அதிகாரிகள் தொற்று நோயை எதிர்த்து போராடுவது குறித்து சீனா உள்ளிட்ட முன்னேறிய நாடுகளின் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

புதிய இறப்புகள் கரோனா காரணமாக ஏற்பட்டதா என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதத்தின் பிற்பகுதியில் இருந்து நேற்று புதிதாக பாதிக்கப்பட்ட 1,74,440 பேர் உட்பட இதுவரை 5,24,440 பேர் இதுவரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,43,630 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ள அரசு ஊடகம், எத்தனை பேர் சோதனை செய்யப்பட்டனர். அவர்களில் தொற்று பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் என்பதை வெளிப்படுத்தவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x