Published : 14 May 2022 03:56 PM
Last Updated : 14 May 2022 03:56 PM

ரஷ்ய - அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் ஆலோசனை: உக்ரைன் போர் தொடங்கியபின் முதன்முறையாக பேச்சு

ரஷ்யா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் தொலைபேசியில் பேசிக் கொண்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியபின்னர் முதன்முறையாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

ஆனாலும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்குவும், அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாய்ட் ஆஸ்டினும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி ஆக்கபூர்வ ஆலோசனை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆஸ்டின் ஒரு மணி நேரம் ரஷ்ய அமைச்சருடன் பேசினார். போர் 12 வாரத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் உக்ரைனுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு ஆஸ்டின் வலியுறுத்தினார் என்றார்.

அமெரிக்க, ரஷ்ய தரப்பிலிருந்து நேரடியாக அமைச்சர்கள் தொலைபேசியில் பேசிக் கொண்டது இருதரப்புக்கும் இடையேயான வெறுப்பை உடைக்கும் எனத் தெரிகிறது.

இதேபோல் ரஷ்ய அதிபர் புதினும், ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கால்ஸும் தொலைபேசியில் பேசினர். அப்போது நாஜிக்களுக்கு எதிராக ரஷ்யா போர் நடத்துவதாக புதின் கூறியதாகத் தெரிகிறது.

போர் எப்போது முடியும் எனத் தெரியாது: ஜெலன்ஸ்கி: இதற்கிடையில் உக்ரைன் அதிப வொலொடிமிர் ஜெலன்ஸ்கி, போர் எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை. இது ஐரோப்பிய நாடுகள், நமது கூட்டாளிகள் ஏன் ஒட்டுமொத்த உலகையுமே சார்ந்தது. ரஷ்யாவுக்கு தடைகளை விதித்து, உக்ரைனுக்கு ஆயுதங்களும், நிதி உதவியும் அளிக்கும் உலக நாடுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது தான் ரஷ்யப் படையெடுப்புக்கு தகுந்த பதிலடி என்று கூறியுள்ளார்.

மேலும், ரஷ்ய அதிபர் புதினுடன் நேருக்கு நேர் பேசத் தயார். ஆனால் எவ்வித நிபந்தனையும், கெடுவும் விதிக்காமல் ஓர் உடன்படிக்கைக்கு வர புதின் திறந்த மனதுடன் வர வேண்டும் என்று ஜெயலன்ஸ்கி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x