Published : 12 May 2022 09:48 PM
Last Updated : 12 May 2022 09:48 PM

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு

கொழும்பு: இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே வியாழக்கிழமை மாலை பதவி ஏற்றுக்கொண்டார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச திங்கள் கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்டது. இதனால் அங்கு அவசரநிலை நெருக்கடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாட்டில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவிற்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

முன்னதாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்றைய தனது உரையில், "தற்போதைய சூழ்நிலையை கட்டுப்படுத்தவும் நாடு அராஜகத்தை நோக்கி செல்வதை தடுக்கவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறக்கூடிய, மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய அமைச்சரவையை நியமிப்பேன்" என்று தெரிவித்திருந்தார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ரணில்விக்ரமசிங்கே 6-வது முறையாக இலங்கை பிரதமராக வியாழக்கிழமை மாலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ரணில் விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக உள்ளார். இந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்ற எஸ்ஜெபி கட்சி இலங்கையின் பிரதான எதிர்கட்சியாக உள்ளது.

அக்கட்சி, "ராஜபக்சேக்களின் குடும்பத்தை காப்பாற்றவே ரணில் விக்ரமசிங்கே பதவியில் அமர்த்தப்பட்டுள்ளதாக" குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் பிரதமராக பதவி ஏற்றுள்ள தங்களுக்கு வாழ்த்துக்கள் என்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கேவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற ரணில் நியமன எம்பியாக இருந்து வந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x