Published : 12 May 2022 12:12 PM
Last Updated : 12 May 2022 12:12 PM

இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக கோத்தபய மறுப்பு: பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகளால் முடியுமா?

கொழும்பு: இலங்கையில் புதிய பிரதமரை நியமிக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ள நிலையில் இதனை எதிர்க்கட்சிகள் கூட்டாக நிராகரித்துள்ளன. அதிபர் பதவி விலக வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். ஆனால் கோத்தபய பதவி விலக மறுத்து வரும் நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கை அரசியலில் அங்கம் வகிக்கும் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

போராட்டக்காரர்களின் கூடாரங்களைக் கிழித்தெறிந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இது பெரும் கலவரமாக மாறியது. மகிந்த ராஜபக்சே பதவி விலகியுள்ளார். இருப்பினும் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில இடங்களில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் இந்த வாரம் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, "நாட்டில் நிலவிவரும் தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறக்கூடிய ஒரு பிரதமரையும், அவர் தலைமையிலான அமைச்சரவையையும் இந்த வாரம் நியமிப்பேன்.

அதன்பின் அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் சாரத்தை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சட்டம் அமலான பின், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கும். மேலும், அதன்மூலமாக புதிய அரசாங்கத்தை தலைமைத் தாங்கும் பிரதமருக்கு புதிய திட்டங்கள் மூலம் நாட்டை முன்னேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்" என்று அறிவித்தார்.

பதவி விலக மறுப்பு

முன்னதாக, இலங்கை மிகப்பெரிய நெருக்கடியில் இருப்பதாக ஒப்புக்கொண்ட அவர், சமீபத்திய வன்முறை நிகழ்வுகளை விளக்கி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் தெரிவித்தார்.

ஆனால் கோத்தபய அறிவிப்பை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து விட்டன. அதிபர் பதவியில் இருந்து கோத்தபய பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

"என்ன நடக்கப் போகிறது என்பதற்கான காலவரையறையை அவர் நாட்டுக்கு வழங்க வேண்டும். விஷயங்கள் மோசமடைவதற்கு முன்பு அவர் தன்னை ஒரு அரசியல்வாதியாக மீட்டுக்கொள்ள இது ஒரு வழியாகும்" என கொழும்பில் எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

ஆனால் கோத்தபய ராஜபக்ச பதவி விலக மறுத்து வருகிறார். இதனால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கை அரசியல் என்ன சொல்கிறது?

இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபரை நீக்குவது கடினமானது. அதுமட்டுமின்றி இது அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளும். முதலில் அதிபர் ஏன் பதவிக்கு தகுதியற்றவர் என்பதை விளக்கி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர் அது உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும்.

பின்னர் நீதிபதிகள் அதனை உறுதி செய்தால் நாடாளுமன்றத்தில் சட்டமியற்றுபவர்கள் மீண்டும் கூடி வாக்களிக்க வேண்டும். அதேசமயம் ராஜபக்சேக்களின் கட்சியான ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாகிகள் இன்னும் நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், கடந்த வாரம் புதிய பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பில் தமக்கு பலம் இருப்பதாக நிரூபித்ததாகவும் கூறுகின்றனர்.

ஆனால் ராஜபக்சேக்களுடன் தொடர்புடைய இருபதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்துள்ளது. இந்த வன்முறையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரணமடைந்துள்ளார. அதன்பிறகு எம்.பி.க்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த தடைகளைத் தாண்டி கோத்தபய ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து நீக்க இலங்கை எதிர்க்கட்சிகளால் முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x