Published : 12 May 2022 03:32 AM
Last Updated : 12 May 2022 03:32 AM

இலங்கை நெருக்கடி: மீண்டும் ரணில் விக்கிரமசிங்கே? - புதிய பிரதமரை ஒரு வாரத்தில் நியமிக்க அதிபர் உறுதி

கோப்புப்படம்

கொழும்பு: இலங்கையில் இந்த வாரம் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.

இலங்கை அர அரசியலில் அங்கம் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இது பெரும் கலவரமாக மாறியது. மகிந்த ராஜபக்சே பதவி விலகியுள்ளார். இருப்பினும் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறன்றன. சில இடங்களில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் இந்த வாரம் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். நேற்றுமாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, "நாட்டில் நிலவிவரும் தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறக்கூடிய ஒரு பிரதமரையும், அவர் தலைமையிலான அமைச்சரவையையும் இந்த வாரம் நியமிப்பேன்.

அதன்பின் அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் சாரத்தை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சட்டம் அமலான பின், பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கும். மேலும், அதன்மூலமாக புதிய அரசாங்கத்தை தலைமை தாங்கும் பிரதமருக்கு புதிய திட்டங்கள் மூலம் நாட்டை முன்னேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்" என்று அறிவித்தார்.

முன்னதாக, இலங்கை மிகப்பெரிய நெருக்கடியில் இருப்பதாக ஒப்புக்கொண்ட அவர், சமீபத்திய வன்முறை நிகழ்வுகளை விளக்கி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் தெரிவித்தார்.

மீண்டும் ரணில் விக்கிரமசிங்கே?

வன்முறை மற்றும் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று முன்னாள் பிரதமர் மற்றும் தற்போது நாடளுமன்ற உறுப்பினராக உள்ள 73 வயதான ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்பின்போது புதிய அரசுக்கு தலைமை பொறுப்பு ஏற்கும்படி அவரை ராஜபக்சே வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால், இடைக்கால நடவடிக்கையாக ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் அடுத்த பிரதமராக பதவியேற்கலாம் என்று இலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x