Published : 10 May 2022 09:01 AM
Last Updated : 10 May 2022 09:01 AM

கொழும்பு மாளிகையிலிருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்ச: வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமா?

தீக்கிரையாக்கப்பட்ட மகிந்த ராஜபகவின் பாரம்பரிய குடும்ப இல்லம்.

இலங்கையில் வன்முறை தீவிரமடைந்துவரும் நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக நேற்று காலையிலேயே மகிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ச இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் அவர் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற விவரம் ஏதுமில்லை.

போராட்டமும் ராஜினாமாவும்... இலங்கையில் மக்கள் போராட்டம் வலுத்துவரும் நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று (மே 10) மாலை தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, "நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள் தங்களது சுயலாபத்துக்காக கலவரத்தை தூண்டி வருகின்றன. என்னை பொறுத்தவரை தாய் நாட்டுக்கே முதலிடம் அளிக்கிறேன். பொதுமக்களின் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளேன்" என்றார். தொடர்ந்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச நேற்று மாலை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்தார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.

பற்றி எரியும் இலங்கை: ஆனால் அவரது ராஜினாமாவுக்குப் பின்னர் இலங்கை முழுவதும் வன்முறை வெடித்தது. அமைதியாகப் போராடிய மக்கள் மீது ராஜபக்ச ஆதரவாளர்கள் ஆங்காங்கே தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையே பற்றி எரிகிறது. ஆவேசமடைந்த மக்கள் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாரம்பரிய வீட்டை எரித்தனர். ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள், சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. 35 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று காலை மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிக்கலுக்கு தீர்வு கிட்டுமா? பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ள நிலையில் இலங்கை அரசியல் நெருக்கடிக்கு தீர்வு கிட்டுமா என்பதில் சந்தேகமே என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே முன்வைத்த அதிபரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையே மக்கள் முன்வைப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்த அனைத்துக் கட்சி ஆட்சி முடிவை புறக்கணித்துவிட்ட நிலையில், மக்களின் அடுத்த குறி கோத்தபய ராஜபக்சே என்றே கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x