Published : 07 May 2022 07:10 AM
Last Updated : 07 May 2022 07:10 AM

சிங்கப்பூர் பவுத்த கோயிலில் செல்லப் பிராணிகளுக்காக சிறப்பு பிரார்த்தனை

கடந்த ஆண்டு புத்த பூர்ணிமாவின்போது நாய்க்கு ஆசி வழங்கிய பவுத்த துறவி.

சிங்கப்பூர்: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு சிங்கப்பூர் பவுத்த கோயிலில் செல்லப் பிராணிகளுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

சிங்கப்பூரில் வசிக்கும் திபெத் வம்சாவழியினர் கடந்த 2001-ம் ஆண்டில் சிங்கப்பூரின் ஜாலான் புசார் பகுதியில் தெக்சன் சோலிங் என்ற பவுத்த கோயிலை நிர்மாணித்தனர். இந்த கோயிலில் பக்தர்கள் மட்டுமன்றி விலங்குகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வரும் 16-ம் தேதி புத்த பூர்ணிமாவை (புத்தர் பிறந்த நாள்) விமரிசையாக கொண்டாட தெக்சன் சோலிங் பவுத்த கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக செல்லப் பிராணிகளுக்காக வரும் 14-ம் தேதி சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மே 14-ம் தேதி இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை செல்லப் பிராணிகளுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும். அப்போது உங்கள் செல்லப் பிராணிகளை அழைத்து வந்து புத்தரின் ஆசியை பெற்றுச் செல்லுங்கள். கோயில் வளாகத்தில் செல்லப் பிராணிகளின் நகங்களில் அழகிய வர்ணங்கள் தீட்டப்படும். அவற்றுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். உயிரிழந்த செல்லப் பிராணிகளின் புகைப்படங்களை கொண்டு வந்து பிரார்த்தனை செய்யலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டு புத்த பூர்ணிமாவின்போதும் தெக்சன் சோலிங் பவுத்த கோயிலுக்கு நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை அழைத்து வரும் பக்தர்கள், சிறப்பு பிரார்த்தனை நடத்தி செல்கின்றனர். கடந்த ஆண்டுகளில் செல்லப்பிராணிகளுக்கு நடத்தப்பட்ட சிறப்பு பிரார்த்தனை தொடர்பான புகைப்படங்களை கோயில் நிர்வாகம் முகநூலில் வெளியிட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x