Published : 07 May 2022 12:46 AM
Last Updated : 07 May 2022 12:46 AM

தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்: இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்

கொழும்பு: இலங்கையில் மீண்டும் அவசர நிலை கொண்டுவரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. பல தசாப்தங்களுக்கு பிறகு இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி இது.

இதனால் நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தன. மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஏப்ரல் 1ம் தேதி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார்.

எனினும், ஐந்து நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 5-ம் தேதி நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடன சட்டம் ரத்து செய்யப்பட்டது. அவசரநிலை ரத்து செய்யப்பட்ட பின்பும், இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுவருகின்றன. மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. அவசர நிலை மூலம் போராட்டங்களை ஒடுக்க இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கூடுதல் பாதுகாப்புக்கும் அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x