Published : 03 May 2022 03:09 PM
Last Updated : 03 May 2022 03:09 PM

புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக அதிகாரங்களை கைமாற்றினாரா ரஷ்ய அதிபர் புதின்? - அமெரிக்க ஊடகங்கள் தகவல்

விளாடிமிர் புதின் (இடது) ; நிக்கோல் பாத்ருசேவ் (வலது)

நியூயார்க்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதால் தனது அதிகாரங்களை தற்காலிகமாக பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய நிக்கோல் பாத்ருசேவுக்கு வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க ஊடகச் செய்தியில், "புதின் புற்றுநோய் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே மருத்துவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அவர் அதனை தள்ளிப்போட்டுவந்த நிலையில் தற்போது உடல்நிலை கருதி அந்த சிகிச்சையை உடனே மேற்கொள்ளவிருக்கிறார். அதனால் தனது அதிகாரங்களில் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய அதிகாரியான நிக்கோல் பாத்ருசேவுக்கு வழங்கியிருக்கிறார். புற்றுநோய் பாதிப்பு மட்டுமல்லாமல் புதினுக்கு வேறு சில பாதிப்புகளும் உள்ளன. அவருக்கு பார்க்கின்சன்ஸ் ( மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாவது) நோய் இருக்கிறது. அதனாலேயே அவர் நலிவுற்று காட்சியளிக்கிறார். பொது இடங்களில் படபடப்புடன் நடந்து கொள்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதின் சுமார் 2 மணி நேரம் பாத்ருசேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையிலேயே அமெரிக்க ஊடகங்கள் சில இச்செய்தியை வெளியிட்டுள்ளதாகவும், இது குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி ஏதும் உறுதிபடத் தெரிவிக்கவில்லை என்றும் அமெரிக்க உயரதிகாரி ஒருவர் கூறினார்.

2020-லேயே நடந்த வாக்கெடுப்பு: ரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர், தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. இந்த நிலையில் புதின் ரஷ்யாவில் செல்வாக்கு மிக்க நபராகத் தொடர்வதால், அவரை அதிபர் பதவியில் மேலும் தொடர வைப்பதற்கான சட்டத் திருத்தத்திற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

மக்களது விருப்பத்தை அறிய இது தொடர்பான வாக்கெடுப்பு 2020-ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடந்தது. இதில் 77.93% பேர் ரஷ்ய அதிபராக புதின் 2036 ஆம் ஆண்டுவரை தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 21.6% பேர் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து 2036-ஆம் ஆண்டு வரை ரஷ்யாவின் அதிபராக புதின் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதினின் இரு மகள்களான மரியாவும், கத்ரினாவும் தந்தையின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு அவரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x