Published : 23 Apr 2022 01:41 AM
Last Updated : 23 Apr 2022 01:41 AM

21,200 வீரர்கள், 176 விமானங்கள், 153 ஹெலிகாப்டர்கள் - ரஷ்யாவுக்கு ஷாக் கொடுத்த உக்ரைன்

கீவ்: உக்ரைன் நாட்டின் 10-வது மிகப் பெரிய நகரமான மரியுபோலை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், ரஷ்ய இழந்துள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை உக்ரைன் வெளியிட்டுள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பெரிதாக வெளியில் தெரிவதில்லை. ரஷ்ய தரப்பு தங்களின் இழப்புகள் பற்றி பேசவில்லை. சில தினங்கள் முன் ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பலை உக்ரைன் வீழ்த்தியது மட்டுமே பெரிய சம்பவமாக இருந்தது. இதனிடையே, போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட இழப்புகளின் அளவு பற்றிய புள்ளிவிவரங்களை உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், ரஷ்ய இராணுவம் தனது 21,200 வீரர்களை இழந்துள்ளது. இராணுவ தளவாடங்களை பொறுத்தவரை, ரஷ்யாவுக்கு சொந்தமான 2,162 ஆயுத வாகனங்கள், 176 விமானங்கள், 153 ஹெலிகாப்டர்கள், 838 டாங்கிகள் மற்றும் 1,523 பிற வாகனங்களை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும், ஏர்கிராஃப்ட் விமானங்கள், குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பல படகுகளையும் ரஷ்ய தங்கள் நாட்டு ராணுவத்திடம் இழந்துள்ளது என்றுகூறி உக்ரைன் அதிர்ச்சி அளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய ராணுவம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் ராணுவ தரப்பில் 4,000 பேர் உயிரிழந்தனர். 1,478 பேர் சரண் அடைந்தனர். தீவிர போருக்குப் பிறகு மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் நேற்று கைப்பற்றியது.

மரியுபோல் நகர் கைப்பற்ற பிறகு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “ரஷ்ய படைகளுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. அங்குள்ள தொழிற்பேட்டையில் பதுங்கியிருக்கும் வீரர்கள் சரண் அடைய வேண்டுகிறேன். இனி ஒரு ஈ கூட தப்பி செல்ல முடியாது. எனினும் அந்த தொழிற்பேட்டை மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ரஷ்ய படைக்கு உத்தரவிட்டுள்ளேன். அதேநேரத்தில் அங்கிருந்து யாரும் தப்பி செல்ல அனுமதிக்க கூடாது. குறிப்பாக வான்வெளியை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

மரியுபோல் நாட்டின் 10-வது மிகப் பெரிய நகராகும். பூகோள ரீதியாக முக்கியத்துவம் பெற்ற இந்த நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியிருப்பதால் கிரிமியாவில் இருந்து கிழக்கு உக்ரைன் பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்பதால், “மரியுபோல் நகரில் சுமார் ஒரு லட்சம் பேர் சிக்கியுள்ளனர். அவர்களை ரஷ்யா விடுவிக்க வேண்டும். அதற்குப் பதிலாக எங்களிடம் கைதிகளாக உள்ள ரஷ்ய வீரர்களை விடுதலை செய்ய தயாராக உள்ளோம்” என்று உக்ரைன் சமரசம் பேசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x