Published : 20 Apr 2022 07:03 AM
Last Updated : 20 Apr 2022 07:03 AM

உக்ரைன் ராணுவ வீரர்கள் உடனே சரணடைய வேண்டும்: ரஷ்யா கடும் எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைன் ராணுவ வீரர்கள் உடனே சரணடைய வேண்டும் என்று ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் 55-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்த போரில் ரஷ்யா, உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷ்யா முயற்சித்துள்ளது. அங்கு ஆயிரக்கணக் கான வீரர்கள், டேங்குகள், ஏவுகணைகளை ரஷ்ய ராணுவம் குவித்து வருவதாகக் கூறப்படுகிறது. டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் அடங்கியடான்பாஸ் பிராந்தியத்தை மையமாகவைத்து தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மரியுபோல் நகரத்திற்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும் என ரஷ்யா நேற்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தேவையில்லாமல் உக்ரைன் ராணுவம் அவர்கள் நாட்டு அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வரும் என நம்பி ரஷ்ய முற்றுகைக்கு எதிராக சண்டையிடும் முயற்சியில் ஈடுபடுகின்றன. ஆனால் உங்கள் அதிகாரிகள் எந்த உத்தரவையும் தரப்போவதில்லை. இப்போதே உங்களது ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையுங்கள். அப்போதுதான் உங்கள் உயிருக்குப் பாதுகாப்பு. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x