Published : 19 Apr 2022 07:48 AM
Last Updated : 19 Apr 2022 07:48 AM

கிழக்கு பகுதி நகரமான கிரெமின்னாவை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது - உக்ரைன்

நோவோட்ருஷெஸ்க் (உக்ரைன்): உக்ரைனின் கிழக்கு பகுதி நகரமான கிரெமின்னாவை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், கீவின் ஆயுதப்படைகள் அருகிலுள்ள ரூபிஜ்னே குடியேற்றத்தில் ரஷ்யப்படைகள் மீது தாக்குதல் நடத்தின. கிரெமின்னாவில் ஞாயிறு முதல் திங்கள் வரை இரவில் பெரிய தாக்குதல் நடந்தது என்று லுகான்ஸ்க் பிராந்திய கவர்னர் செர்ஜி கெய்டே ஊடகத்திற்கான அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையில், "ரஷ்ய ராணுவம் ஏற்கனவே பெரிய அளவிலான ராணுவப் பொருட்களுடன் அங்கு நுழைந்து விட்டன. எங்கள் பாதுகாவலர்கள் புதிய நிலைக்கு பின்வாங்கி விட்டனர்" என்றும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஒலெக்ஸி டானிலோவ் கிழக்கில் ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதலை உறுதிப்படுதியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "டோனெட்ஸ்க், லுகான்ஸ்க் மற்றும் கார்கிவ் பிராந்தியங்களில் ரஷ்யப்படைகள் எங்கள் பாதுகாப்புகளை உடைக்க முயன்றனர். அதிர்ஷ்டவசமாக எங்கள் ராணுவம் இன்னும் அவைகளை விட்டுத் தரவில்லை. ஆனாலும் அவர்கள் கிரெமின்னா மற்றும் இன்னுமொரு சிறிய நகரத்தைக் கைப்பற்றி விட்டனர். சண்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் சரணடையவில்லை" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் கார்கிவ் பகுதியில் ரஷ்யா நடத்திய புதிய குண்டுவீச்சுத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர், 15 காயமடைந்துள்ளனர் என்று அந்த பிராந்தியத்தின் ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய படையெடுப்பின் போது தலைநகர் கீவ்-ஐ சுற்றி நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யப் படைகள் தற்போது பின்வாங்கி உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற தாக்குதல்களை முடுக்கி விட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x