Published : 18 Apr 2022 12:05 PM
Last Updated : 18 Apr 2022 12:05 PM

ஷாங்காயில் மெல்ல குறையும் கரோனா: கட்டுப்பாடுகளை தளர்த்தும் சீன அரசு

கோப்புப் படம்

ஜெய்ஜிங்: சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த மார்ச் இறுதி முதல் கரோனா தீவிரமாகப் பரவி வந்த நிலையில் அங்கு மூன்று பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்நிலையில், அன்றாட தொற்று குறைவதால் பல்வேறு தளர்வுகளை அரசு அமல்படுத்தி வருகிறது.

சீனாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் ஷாங்காய். இங்கு கரோனா தொற்று பரவியதால், கடந்த 5 ஆம் தேதி முதல் ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். உணவு மற்றும் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் ஸ்தம்பித்தது.

இதனைத் தொடர்ந்து பல இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். மேலும், ஷாங்காய் பொருளாதார ரீதியாக முக்கியமான நகரம் என்பதால் தொழில் முடக்கமும் சீனப் பொருளாதாரத்தைப் பதம் பார்க்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஷாங்காய் நகரில் ஊரடங்கில் சில தளர்வுகளை சீன அரசு அறிவித்தது. அதன்படி கரோனா தொற்று குறைந்த பகுதிகளில் உள்ள மக்கள் வெளியே வரலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், முழு ஊரடங்கை நீக்கி பகுதி நேர ஊரடங்கை சீன அரசு அறிவித்தது.

இதற்கிடையில் ஷாங்காய் நகரில் இன்று 22,248 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூன்று பேரும் 80 வயதைக் கடந்தவர்கள் என்றும் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் என்றும் ஷாங்காய் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஷாங்காய் நகரில் மார்ச் மாதம் கரோனா பரவல் தொடங்கிய பிறகு ஏற்பட்ட முதல் மரணங்கள் இவை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் ஷாங்காய்யில் கடந்த சில நாட்களாக கரோனா குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனாவால் இதுவரை உலக முழுவதும் 62 லட்சம் பேர் பலியாகி உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x