Published : 13 Apr 2022 10:02 AM
Last Updated : 13 Apr 2022 10:02 AM

ஷாங்காய் ஊரடங்கு: எதிர்ப்பைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்தியது சீனா

ஷாங்காய் நகரம் | கோப்புப் படம்

பெய்ஜிங்: ஷாங்காயில் லட்சக்கணக்கான மக்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருக்கும் சூழலில், மக்களின், உலக நாடுகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து பொருளாதாரத் தேவைக்கான சில தளர்வுகளை சீனா அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

சீனாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் ஷாங்காய். இங்கு கரோனா தொற்று பரவியதால், கடந்த 5 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் சுமார் 24,659 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.இதனால் அங்கு ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். உணவு, மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் ஸ்தம்பித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், தங்கள் வீடுகளில் இருந்தபடியே தெருவில் நிற்கும் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

தொடர்ந்து உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெறுவதில் ஷாங்காய் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். இதற்கிடையில் அவசரகால பணியில் இல்லாத அமெரிக்க அரசு ஊழியர்கள் ஷாங்காய் தூதரகத்திலிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியது.

இந்த நிலையில் ஷாங்காய் நகரில் ஊரடங்கில் சில தளர்வுகளை சீன அரசு அறிவித்துள்ளது. அதன்படி கரோனா தொற்று குறைந்த பகுதிகளில் உள்ள மக்கள் வெளியே வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் பகுதி நேர ஊரடங்கை சீன அரசு அறிவித்து வருகிறது.

பொருளாதாரத் தேவைக்காகவே இந்த முடிவை சீனா எடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் முடிவை விமர்சிக்கும் சீனா: ”தொற்றுநோய் பெயரில் அரசியல் செய்வதை அமெரிக்கா நிறுத்த வேண்டும். சீனாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும்” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x