Published : 11 Apr 2022 07:15 PM
Last Updated : 11 Apr 2022 07:15 PM

புதிய தீர்வு: இலங்கையில் ராஜபக்சேக்கள் இல்லாத அரசு?- சிறிசேனாவை சந்திக்கிறார் கோத்தபய; மக்களுக்கு உரையாற்றுகிறார் மகிந்தா 

பிரதமர் மகிந்தா,அதிபர் கோத்தபய உள்ளிட்ட ராஜபக்சே குடும்பத்தினர்

கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியுடன் அரசியல் நெருக்கடியும் அதிகரித்து வரும் நிலையில் புதிய தீர்வாக ராஜபக்சே குடும்பம் இல்லாத ஒரு அரசை உருவாக்க முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அதிபர் கோத்தபய ராஜபக்ச, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்திக்கவுள்ளார்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், அமைச்சர்கள் ராஜினாமா செய்து புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்தா ராஜபக்சே அரசு பெரும்பான்மை இழந்து விட்டது. இலங்கை மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆளும் கட்சி கூட்டணிக்கு 157 எம்.பிக்களின் பலம் உள்ளது.

நாட்டு மக்களுக்கு உரை

ஆனால் ஆளும் கூட்டணியை சேர்ந்த 50 முதல் 60 எம்பிக்கள்ராஜபக்சே அரசுக்கு ஆதரவு தர மறுத்துள்ளனர். இதனால் ஆளும் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் மகிந்த ராஜபக்சே இறங்கியுள்ளார். அதேசமயம் அனைத்து கட்சிகளும் அடங்கிய தேசிய அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தபோதிலும் அதனை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து விட்டன. இதனால் அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய தீர்வாக ராஜபக்சே குடும்பம் இல்லாத ஒரு அரசை உருவாக்க முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மகிந்தா, கோத்தபய மற்றும் பசில் ராஜபக்சே

அதிபர் கோத்தபய ராஜபக்ச, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்திக்கவுள்ளார். இலங்கை மக்களின் எதிர்ப்புக்கு காரணமாக இருக்கும் ராஜபக்சேக்கள் இல்லாத ஒரு அரசு அமைக்க முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

ராஜபக்சே இல்லாத அரசு

இதுகுறித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிர்வாகிகளும் ஏற்கெனவே சந்தித்து பேசியுள்ளனர். அப்போது குறைந்த இலாகாக்கள் கொண்ட அரசு, ராஜபக்சேக்கள் இல்லாத அனைத்துக் கட்சி அமைச்சரவையின் கீழ் இடைக்கால நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.

ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே இதனை ஏற்க தயாரில்லை. இந்தநிலையில் இருவரும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் நடந்துள்ள ஆட்சி மாற்றத்தை போலவே இலங்கையிலும் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பது போலவே இலங்கையிலும் நடைபெறும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம்தாசா கூறியுள்ளார்.

சிறிசேனா மற்றும் மகிந்தா ராஜபக்சே

அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கும் அவரது சொந்த கூட்டணியில் இருக்கும் சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளை சமதானம் செய்யும் அவரது முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசின் மூத்த கொள்கை வகுப்பாளர்களுடன் அடுத்த சில நாட்களில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான திட்டத்துடன் பேசவுள்ளது. அதற்கு முன்பாக அரசியல் தீர்வு காணப்பட்டு பொருளாதார சிக்கலை தீர்க்கும் முயற்சிகள் வேகமெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இலங்கையில் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x