Published : 09 Apr 2022 06:40 AM
Last Updated : 09 Apr 2022 06:40 AM

ஷாங்காய் நகரில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்: தம்பதிகள் ஒன்றாக தூங்க, கட்டிப்பிடிக்க தடை

ஷாங்காய்

கடந்த 2019 இறுதியில் சீனாவில் கரோனா வைரஸ் உருவாகி உலகின் பல நாடுகளுக்கும் பரவியது.

இந்நிலையில், சீனாவில் தற்போது பிஏ.2 என்ற ஒமிக்ரான் வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.குறிப்பாக 2.6 கோடி மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரில் அதிகப்படியானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவ தால், அங்கு கடுமையான ஊரடங்குஅமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளது.

இதனிடையே, ஊரடங்கு காரண மாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், இதைக் கண்டித்து பொதுமக்கள் தங்கள் வீட்டு பால்கனியில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என ட்ரோன்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.

இதுபோல மற்றொரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பேசும் சுகாதாரப் பணியாளர்கள், “இரவு முதல் தம்பதிகள் தனித்தனியாக தூங்க வேண்டும். முத்தமிட்டுக்கொள்ளக் கூடாது, கட்டிப்பிடிக்கக் கூடாது. தனித்தனியாக சாப்பிட வேண்டும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி” என கூறுகின்றனர்.

மருத்துவமனைகள்

ஷாங்காய் நகரில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த 2,000 ராணுவ மருத்துவ ஊழியர்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களை சீன அரசு அனுப்பி வைத்துள்ளது.

மேலும் அங்கு ஆயிரக்கணக்கான படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனைகளை சீன அரசு அமைத்து வருகிறது. தனிமைப்படுத்துதல் வார்டுகளை உள்ளடக்கியதாக இந்த மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஹாங்காங்கில் நேற்று 19,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவல் காரணமாக 2.5 கோடி மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரில் 2 கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள 2.5 கோடி மக்களுக்கு அடுத்த 36 மணி நேரத்தில் கரோனா பரிசோதனை செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. ஷாங்காய் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8000-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஷாங்காய் நகரில் நேற்று மட்டும்புதிதாக 21,222 பேருக்கு கரோனாவைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் நியூ இன்டர்நேஷன் எக்ஸ்போ சென்டரானது தற்போது 15 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட தனிமைப்படுத்துதல் மருத்துவ மனையாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் தி கவேர்னஸ் நேஷனல் எக்சிபிஷன் அன்ட் கன்வென்ஷன் சென்டரானது 50 ஆயிரம் பேர் தங்கி சிகிச்சை பெறும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டு மல்லாமல் நகரிலுள்ள ஜிம்னாசி யங்கள், உள்ளரங்கு மைதானங்கள், ஓட்டல்களை தனிமைப்படுத்துதல் மையமாக அரசு மாற்றி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x