Published : 07 Apr 2022 04:28 AM
Last Updated : 07 Apr 2022 04:28 AM

இலங்கையில் வலுக்கும் போராட்டங்கள் - அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக மறுப்பு

கொழும்பு: இலங்கையில் மக்கள் போராட்டம் வலுத்துவரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச, தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ளார்.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 13 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிப்பதால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதையடுத்து, அரசுக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன. அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்த நிலையில், இலங்கை அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, 4 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டது. அதில் இடம் பெற்ற நிதியமைச்சர், பதவியேற்ற மறுநாளே ராஜினாமா செய்தார்.

மேலும், ஆளும் கூட்டணியில் இருந்து 41 எம்.பி.க்கள் விலகி தனித்து செயல்படுவதாக அறிவித்தனர். பல கட்சிகளும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டன. இதனால், அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதிபர் பதவி விலக மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அரசின் தலைமை கொறடா ஜான்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று கூறும்போது, ‘‘எந்தச் சூழ்நிலையிலும், அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யமாட்டார்’’ என உறுதிபட தெரிவித்தார். இதனால், அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x