Published : 05 Apr 2022 06:53 PM
Last Updated : 05 Apr 2022 06:53 PM

இலங்கையில் பெரும்பான்மை இழந்த ஆளும் கூட்டணி அரசு: அதிபருக்கு எதிராக திரண்ட மாணவர்கள், வழக்கறிஞர்கள்

கொழும்பு: இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டு இன்று பெரும் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள், வழக்கறிஞர்களுடன் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களும் இதில் பங்கேற்றனர்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து, இடைக்கால அமைச்சர்களாக 4 பேர் பொறுப்பேற்றுள்ளனர். அவர்களில் திடீரென நிதியமைச்சர் அலி சப்ரி பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் பதவி விலகியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. ஆனால் பெரும்பாலான எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை. இலங்கை மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆளும் கட்சி கூட்டணிக்கு 157 எம்.பிக்களின் பலம் உள்ளது. ஆனால் ஆளும் கூட்டணியை சேர்ந்த 50 முதல் 60 எம்பிக்கள் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு ஆதரவு தர மறுத்துள்ளனர். இதனால் ஆளும் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் மகிந்த ராஜபக்சே இறங்கியுள்ளார்.

இதனிடையே அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு இன்று பெரும் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் திரளாக இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்களும் பங்கேற்றனர். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இடைக்காலப் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கு அனைத்துக் கட்சிகளுடனும் பேசுமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
‘‘இலங்கை நெருக்கடிக்கு தீர்வு காண முதல் நிபந்தனை தற்போதைய அரசு வெளியேற வேண்டும். அதற்கு பதிலாக இடைக்கால அரசு இருக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் விமல் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x